மருதகாசி வாழ்க்கைக் குறிப்பு:
அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. இவரின் தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் பெயர் மிளகாயி அம்மாள் ஆவார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
அதன் பிறகு கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவியின் பெயர் தனக்கோடி அம்மாள் மேலும் மருதகாசிக்கு 6 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர்.
1949இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய மருதகாசி சுமார் 550 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
நாடக பாடல்களில் மருதகாசியின் பங்கு:
மருதகாசி சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார் கல்லூரிப் படிப்பிற்கு பிறகு குடந்தையில் “தேவி நாடக சபையில்” நாடகங்களுக்கு ஒரு சில பாடல்கள் எழுதிவந்தார். முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி எழுதிய “மந்திரிகுமாரி” போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்…
கவிஞர் கா. மு. ஷரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டு களுக்கு பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும் பாடலாசிரியருமான ராஜகோபாலரிடம் உதவியாளராக இருந்தார்.
திரைப்படப் பாடல்களில் மருதகாசியின் பங்கு:
1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தார். டி ஆர் மகாலிங்கம், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்கு தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார்.
பெண் எனும் மாயப் பேய்யாம்.…
பொய் மாதிரி என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார் இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப்பாடல் ஆகும். அதைத்தொடர்ந்து பொன்முடி(1950) என்ற படத்தின் பட பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன.
தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை! என்ற முடிவு நிலை பாடலும்,”உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர்.
சுரதாவின் கதை – வசனத்திலும், நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த “பாகவதரின் அமரகவி” படத்திற்கு பாடல்கள் எழுதினார். மேலும் அவர் தொடர்ந்து எழுதிய சிவாஜியின் “தூக்குத் தூக்கி” படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மங்கையர்திலகம் படத்தில் இடம்பெற்ற நீல வண்ண கண்ணா வாடா… என்ற பாடலை முதலில் கண்ணதாசன் எழுதினார். ஆனால் தயாரிப்பாளர் எல்.வி பிரசாத் அதில் திருப்திபடவில்லை அவர் மருதகாசி அழைத்து எழுதச் சொன்னார் மருதகாசி எழுதிய பாடல் “மிகப் பிரபலமானது” என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் காலகட்டத்தில் ஜி.ராமநாதன், கே.வி மகாதேவன், எஸ். தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.
எம்ஜிஆருக்கு எழுதிய பாடல்:
தேவரின் “தாய்க்குப்பின் தாரம்” படத்துக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே”.. என்ற பாடலை எழுதினார்.
இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார் அதில் முக்கியமானது தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த “தாய் மீது சத்தியம்”..
நினைவை விட்டு அகலாத மருதகாசியின் சில பாடல்கள்:
1. சத்தியமே லட்சியமாய் கொள்ளடா (நீலமலைத் திருடன்)
2. ஆளை ஆளைப் பார்க்கிறார் (ரத்தக்கண்ணீர்)
3. சமரசம் உலாவும் இடமே…(ரம்பையின் காதல் 1939)
4. சிரிப்பு… இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)
5. கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த (தூக்குத்தூக்கி)
6. ஆனாக்க அந்த மடம்…(ஆயிரம் ரூபாய்)
7. கோடி கோடி இன்பம் பெறவே (ஆடவந்த தெய்வம்)
8. ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே (பிள்ளைக் கனியமுது)
9. கடவுள் எனும் முதலாளி (விவசாயி)
10. வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே (மல்லிகா)
11. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே (உத்தம புத்திரன்)
12. காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)
தமிழக அரசு மருதகாசியின் பாடலை எவ்வாறு சிறப்பித்துள்ளது:
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும் ரூ 5 லட்சத்தை முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.